சென்னை-மைசூரு இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை தொடங்கியது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த தருணத்தில், வரும் 2023 ஆகஸ்ட்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்கெனவே 4 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருக்கிறார். சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும்.
இதையும் படிக்க- திரிஷாவுக்குக் காலில் என்ன காயம்?
இந்த நிலையில் சென்னை-மைசூரு இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 5.50 மணிக்கு தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தை தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.