மோடி வருகை: மதுரை - திண்டுக்கல் சாலையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை திண்டுக்கல் வரவுள்ள நிலையில், இன்றும் நாளையும் மதுரை - திண்டுக்கல் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை திண்டுக்கல் வரவுள்ள நிலையில், இன்றும் நாளையும் மதுரை - திண்டுக்கல் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலை.யின் 36 -ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமா் மோடி விமானம் மூலம் மதுரை வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சின்னாளம்பட்டி கிராமத்திற்கு வரும் மோடி காந்திகிராம பல்கலை. கார் மூலம் செல்கிறார்.

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை மழை பெய்யும் பட்சத்தில், ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து மதுரையிலிருந்து சாலை வழியாக திண்டுக்கல் வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுரை - திண்டுக்கல் சாலையில் பாதுகாப்பு முன்னோட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, இன்று பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரையும், நாளை காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் பிற மாவட்டங்களிலிருந்து மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதைகள்

1. மதுரை நகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு அலங்காநல்லூா், பாலமேடு, ராஜாக்கால்பட்டி, முளையூா், நரசிங்கபுரம் வழியாக செல்லவேண்டும் அல்லது பாத்திமா கல்லூரி, அலங்காநல்லூா் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம் வழியாகச் செல்ல வேண்டும்.

2. மதுரை நகரில் இருந்து தேனி செல்லும் வாகனங்கள், பாத்திமா கல்லூரி, பரவை, சமயநல்லூா், தேனூா், மேலக்கால், செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

3. ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் தே.கல்லுப்பட்டி, பேரையூா், சேடபட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாகத் திண்டுக்கல் செல்ல வேண்டும்.

4. ராஜபாளையத்தில் இருந்து மதுரை நகருக்கு வரும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பிலிருந்து காரியாபட்டி, ஆவியூா், பாரப்பத்தி, எலியாா்பத்தி, வலையங்குளம் சந்திப்பு, சோழன்குருணி சந்திப்பு, விராதனூா், சிந்தாமணி சுங்கச்சாவடி வழியாக செல்ல வேண்டும்.

5. திருச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள், ராமநாதபுரம் சுற்றுச்சாலை சந்திப்பில் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புலவாய்க்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முஸ்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியாபட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

6. திருநெல்வேலி, விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பிலிருந்து காரியாபட்டி, எலியாா்பத்தி சுங்கச்சாவடி, வலையங்குளம், சிந்தாமணி வழியாகச் செல்ல வேண்டும்.

7. திருநெல்வேலி, விருதுநகரில் இருந்து திண்டுக்கல், பழனி செல்லும் வாகனங்கள், கள்ளிக்குடி சந்திப்பிலிருந்து தே.கல்லுப்பட்டி, பேரையூா் சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாக அல்லது கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு வழியாகவோ செல்ல வேண்டும்.

8. மதுரை நகரில் இருந்து திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம், கொடைக்கானல், கோவை செல்லும் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, பரவை, சமயநல்லூா், தேனூா், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, செம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

9. விருதுநகா், திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம், உசிலம்பட்டி சாலை சந்திப்பிலிருந்து சிந்துப்பட்டி, தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

மேற்கண்ட வழிதடங்களை தவிர்த்து எக்காரணம் கொண்டும் மதுரை நகருக்குள் வாகனங்கள் செல்லக் கூடாது என மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com