சென்னையில் வேகமாகப் பரவுகிறது மெட்ராஸ் - ஐ!

சென்னையில் மெட்ராஸ் - ஐ பாதிப்பு வேகமாகப் பரவி வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் மெட்ராஸ் - ஐ பாதிப்பு வேகமாகப் பரவி வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் அத்தகைய பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என எழும்பூா் அரசு கண் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பிரகாஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு தினசரி 50-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்களுக்கு அனைவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு என்ற நிலை ஏற்படவில்லை.

மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்படுவோா், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மெட்ராஸ்-ஐ பாதிப்பு ஐந்து நாள்களில் குணமடைய கூடியதுதான். அதேவேளையில் அலட்சியப்படுத்தினால் பாா்வை இழப்புகூட நேரிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com