தீபாவளி சீட்டு மோசடி வழக்கில் 4 பேர் கைது; கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

திருவள்ளூர்  அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.24 கோடி  வரை மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் ஜே.பி.ஜோதி உள்பட நான்கு பேர் கைது.
தீபாவளி சீட்டு மோசடி வழக்கில் கைதானோர்.
தீபாவளி சீட்டு மோசடி வழக்கில் கைதானோர்.
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர்  அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.24 கோடி  வரை மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் ஜே.பி.ஜோதி, அவரது மனைவி உள்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் அருகே வெங்கல் அடுத்த மாலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி (33). இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தீபாவளி சீட்டு பண்டு நடத்தி வந்தார். அப்போது மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருடள்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார். 

இதை நம்பி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு  பணத்தை வசூலித்தார். தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருள்கள் வழங்காமல் இருந்தாராம்.  இது குறித்து பாதித்த பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகம் மற்றும்  ஆட்சியர்  அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவானாராம். 

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் கொடுத்த புகாரையடுத்து மாவட்ட எஸ்பி பா. சிபாஸ்  கல்யாண் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மற்றும் கந்தன் தலைமையில் இரண்டு குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஜே.பி ஜோதி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் ஜே.பி ஜோதியை (33) கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் ஜே.பி ஜோதியின் தந்தை மதுரை(65), மனைவி சரண்யா (25) மற்றும் தம்பி பிரபாகர் (30) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட4 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com