"உதவிப் பேராசிரியர் பணி தேர்வு இறுதி உத்தரவைப் பொருத்தே அமையும்'

தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு இறுதி உத்தரவைப் பொருத்தே அமையும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு இறுதி உத்தரவைப் பொருத்தே அமையும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
 தஞ்சையைச் சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த மனு:
 அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-இல் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், பணி நியமன நடைமுறைகள் தொடரவில்லை. உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் தரப்பில் 3 அரசாணைகள் வெளியிடப்பட்டன.
 அதில், கடந்த 2019-இல் அறிவிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படும்.
 தேர்வு மூலம் நான்காயிரம் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. பலர் 50 வயதைக் கடந்த நிலையில், தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், தனியார் கல்லூரியில் பணி புரிவோருக்கு பாதிப்பு ஏற்படும்.
 தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வது எங்களைப் பாதிக்கும். எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கடந்த 2019-இல் அறிவித்தபடி, சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் மூலம் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.
 இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை வந்தது. அப்போது, இந்த விவகாரம் வழக்கின் இறுதி உத்தரவைப் பொருத்தே அமையும் என்றும், அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com