சீர்காழி அருகே மணிக்கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதவி தொகையை வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக தமிழகத்தில் அதிகப்படியாக 44 சென்டிமீட்டர் மழை பதிவானது.
இதையும் படிக்க.. 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வந்து, மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அன்றே அறிவித்தார்.
இந்நிலையில் இதற்கான அரசாணை நேற்று பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 16 கோடி 16 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் தொகை, 239 நியாய விலை கடைகளில் வழங்கப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மழை நிவாரண உதவி தொகையை பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த மணிக் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் ரூபாய் ஆயிரம் வழங்கும் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையை வழங்கினர்.