நாமக்கல் அருகே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (52). இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோகனூருக்கு தனது குடும்பத்தினர் 5 பேருடன், ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கேஸ் நிரப்பி விட்டு இயக்க முயன்றபோது, கார் இயங்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் காரை தள்ளி கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் காரை விட்டு இறங்கி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து நல்லிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.