தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி(திங்கள்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வந்ததால், சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. ஆனால், இந்தாண்டு மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் முக்கிய நகரங்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளதால், பண்டிகைக்கு ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்ககூடும்.
சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
இந்நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து 16,888 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 10,518 பேருந்துகளும், பிற நகரங்களிலிருந்து 6,370 பேருந்துகளும் சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக அக்டோபர் 21 முதல் 23 வரை இயக்கப்படவுள்ளன.
அதேபோல், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்புவோர்களுக்கு வசதியாக அக்டோபர் 24 முதல் 27 வரை 13,152 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.