
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங் யாதவ் இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட முலாயம் சிங், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜவாதி தொண்டர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கில், திமுக சார்பாக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதிமுகவின் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.