அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி சார்ந்து முடிவெடுக்க தன்னை கலந்தாலோசிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சமீபத்திய விசாரணையில், அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக குழு உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என யாரேனும் மனு அளித்தால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறி சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருகிற அக். 17 ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளதை அடுத்து, ஓபிஎஸ் இதுகுறித்து இரண்டாவது முறையாக இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
முன்னதாக ஓபிஎஸ், கடந்த ஜூலை மாதம் பேரவைத் தலைவருக்கு எழுதியிருந்தார். ஏனெனில், அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கி ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க இபிஎஸ் தரப்பு பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்திருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரின் கடிதங்களும் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி?