திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சொந்தமான யோகநரசிம்மர் மற்றும் கணபதி சிலைகள் அமெரிக்காவில் நெல்சன் - அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிஐடி காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிலைகள் திருடப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும், சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக அதேப்போன் போலியான சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
2017ஆம் ஆண்டு வேணுகோபால் சுவாமி கோயிலில் நடந்த சிலை திருட்டு தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்தனர்.
இந்த புகாரில் கூறப்பட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்த நிலையில், திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க | பழனி - கொடைக்கானலுக்கு ரோப் காா்: அறிய வேண்டிய அனைத்து தகவல்களும்
இதையடுத்தே, கோயிலுக்குச் சொந்தமான பழமையான யோக நரசிம்மர் மற்றும் கணபதி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்குச் சொந்தமான சிலைகளை மீட்பதற்கான முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.