900 கன அடியாக உயர்ந்து வெளியேறும் உபரிநீர் வெளியேறி வருவதால், குடியாத்தம் கௌண்டன்யா ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக - ஆந்திரா எல்லையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதுமாக நிரம்பியது. மேலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நேற்று காலை 250 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்ந்து இரவு 900 கன அடி நீர் மோர்தானா அணையில் இருந்து வெளியேறி வருகிறது.
உபரிநீர் வரும் கௌண்டன்யா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, அக்ரஹாரம், ரங்கசமுத்திரம், பெரும்பாடி மற்றும் குடியாத்தம் நகரத்தில் ஆற்றுக் கரையோரம் உள்ள பகுதிகளில் ஆற்றின் இரு கரைகளில் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை
மேலும் குடியாத்தம் காவல் துறையினர் கௌண்டன்யா ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.