இன்றைக்கு இருக்கும் சமூக ஊடகங்கள் மட்டும் அன்றைக்கு இருந்திருந்தால் நான்தான் முதலமைச்சர் என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வருங்காலத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்து மட்டும் செயல்படக் கூடாது. நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது இந்த செல்போன்களும், சமூக ஊடகங்களும் இருந்திருந்தால் நான்தான் இன்றைக்கு முதலமைச்சர். இதை நான் துரதிருஷ்டமாகக் கருதவில்லை.
பலமுறை பல விஷயங்களை நான் சொல்லி இருக்கிறேன். அதை நீங்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அடுத்த 15 நாள்களில் மிகப்பெரிய அறிவிப்பு உங்களிடம் வரும். அதற்கு நீங்கள் செயல்வீரர்களாக இருந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | பட்டாசு வெடிக்கும் போது என்ன செய்யலாம்? செய்யக் கூடாது?
தமிழகம் தழுவிய மக்கள் பிரச்னையை நாம் கையில் எடுக்கும்போது மக்கள் நமக்கு ஆதரவளிப்பார்கள். விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வருகிறது. நாம் அனைவரும் மனித சாதி என்பதை மட்டும் நினைக்க வேண்டும்” எனப் பேசினார்.