தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் 1.65 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, கே.கே.நகர் மற்றும் மாதவரம் என 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நாளில், நள்ளிரவு 12 மணி வரை 3,300 பேருந்துகளில் 1,65,000 பேர் பயணம் செய்துள்ளதாகவும் மேலும் 1.66 லட்சம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இன்றும் 3,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகம் இருக்கும் என்றும் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.