திருப்பூர்: பிஏபி பாசனத்திட்டத்தில் உரிய தண்ணீர் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிஏபி மற்றும் இதர பாசன சங்க விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் (தாராபுரம்), குமரேசன் (உடுமலை), ஜஸ்வந்கண்ணன், பிஏபி கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர்பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ப.வேலுசாமி கூறியதாவது:
திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதில், காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக பிஏபி பாசனத்திட்டத்தில் உரிய தண்ணீர் வந்து சேரவில்லை.
இதுதொடர்பாக கடந்த 36 மாதங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. ஆகவே, எங்களது வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையில் பிஏபி திட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில் பகுதிக்கு உரிய தண்ணீர் வழங்க வேண்டும்.
இதையும் படிக்க: மத்திய தென் கொரியாவில் லேசான நிலநடுக்கம்!
பிஏபி வாய்க்காலில் நடைபெறும் தண்ணீர் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்றே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார். இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.