வாழப்பாடி: வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், நிலை தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகர் பகுதியில் சேர்ந்தவர் மருந்து விற்பனை பிரதிநிதி லட்சுமிபதி (52). இவரது மகள் அனுஸ்ரீக்கு, அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
மகளை கல்லூரியில் சேர்த்து விடுவதற்காக, இவர் தனது மனைவி ஜெயசுதா (42). மகள் அனுஸ்ரீ (18). மகன் திருப்புகழ் (11). உறவினர் நாராயணன் ஆகியோருடன், இன்று அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினரான ஓம்சக்தி (28). என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) காலை, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே, கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெயசுதா, திருப்புகழ், அனுஸ்ரீ, ஜெயசுதாவின் சகோதரர் நாராயணன், கார் ஓட்டுநர் ஓம்சக்தி ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காருக்கு அடியில் சிக்கி தவித்த இவர்களது அலறல் சத்தம் கேட்டு இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் இணைந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: சிம்புவின் ‘பத்து தல’ வெளியீடு குறித்து புதிய அப்டேட்
இந்த விபத்துக் குறித்து வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.