மின் விளக்குகளால் ஒளிரும் வேலூர் கோட்டையை ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழும் பொது மக்கள்.
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை. சுற்றிலும் அழகிய அகழியுடன் உள்ள இக்கோட்டையில் 1806 ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சிதான் இந்திய விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்ட முதல் புரட்சி ஆகும்.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பொலிவுறு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் வேலூர் கோட்டையை மேம்படுத்துவதும் அடங்கும். 133 ஏக்கரில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட இக்கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. அது நேற்று முதல் இரவில் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது. மின் விளக்குகளால் வேலூர் கோட்டை மின்னுவதோடு இரவிலும் தனது கம்பீரத்தை நிலைநாட்டி வருகிறது. அகழியில் தேங்கியிருக்கும் நீரில் பிரதிபலிக்கும் கோட்டை பிம்பம் மேலும் அழகு சேர்க்கிறது, பார்போரை வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது இது. இரவில் மின் விளக்கில் ஒளிரும் வேலூர் கோட்டை மக்கள் ஆர்வமுடன் பார்ப்பதோடு புகைபடங்களையும் எடுத்துச்செல்கின்றனர்.