அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார். கடந்த ஜூன் 27 ஆம் தேதிக்குப் பிறகு, 72 நாள்களுக்குப் பின்னர் அவர் தலைமை அலுவலகம் செல்கிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார். நாளை இந்த நிகழ்வில் திரளான தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக அலுவலத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிற்பித்தது. அதன்படி கடந்த ஜூலை 21 ஆம் தேதி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு