திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தம்

திருவாரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து பெருங்கடம்பனூர் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்தை மறைத்து அதில் ஒருவர் மட்டும் ஏறுவதும் இறங்குவது என மீண்டும் மீண்டும் அதே போன்று செய்துள்ளனர்.

இதுகுறித்து பேருந்து நடத்தினர் ராஜாராமன் அவர்களிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

மேலும், அருகில் கிடந்த கண்ணாடித் துண்டால் நடத்துனர் ராஜாராமனின் தொடையில் குத்தியுள்ளனர். இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடத்துனர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி விவின் முருகநாதன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய நான்கு பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநரைத் தாக்கியவர்களில் விவின் மட்டும் கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவாரூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயங்கக்கூடிய 70 பேருந்துகள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்குள் செல்ல வேண்டிய 15 பேருந்துகளும் வெளியேறவில்லை. இதன் காரணமாக பயணிகள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இன்று முகூர்த்த நாளாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்தின் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

இதனையடுத்து நாகை மண்டல துணை மேலாளர் (வணிகம்) சிதம்பர குமார் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவ அறிக்கை வந்தவுடன் இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com