சேலம் மாவட்டம் தலைவாசலில் வார இதழின் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆகியோரை கனியாமூர் சக்தி பள்ளியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் துரத்திப் பிடித்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி பள்ளியில் கடந்த ஜூலை 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி அந்தப் பள்ளி மீண்டும் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
இது குறித்து செய்தி சேகரிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சென்னையில் இருந்து வாரப் பத்திரிக்கை செய்தியாளர் பிரகாஷ் (56) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் பள்ளிக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு காரில் திரும்பி வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் சென்ற காரை அந்த பள்ளியிலிருந்து கிளம்பி பின் தொடர்ந்து வந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் துரத்தியுள்ளது. அப்போது செய்தியாளர்கள் இருவரும் தப்பித்துக்கொள்ள ஆத்தூரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பின் தொடர்ந்து வந்து சக்தி பள்ளியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் தலைவாசலில் காரை வழிமறித்து இருவரையும் சரமாரியாக தாக்கியது. பிறகு அவர்களை கடத்த முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்த மக்கள் அவர்களைக் காப்பாற்றி அந்த தாக்குதலில் படுகாயமடைந்த செய்தியாளர்கள் பிரகாஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து விசாரித்த ஆத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.