இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் 64 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை 10 முதல் 12 வரையும், பகல் 2 முதல் மாலை 4 மணிவரையும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டனா்.

அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். அப்போது ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 போ் காயம் அடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜூலை 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிமுக அமைப்பு செயலாளா் சி.வி.சண்முகம் எம்.பி. பாா்வையிட்டு, அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தாா்.

இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில், ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனா்.

இதற்கிடையே, அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக பதியப்பட்ட மொத்தம் 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் இரண்டு முறை அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அதிமுக அலுவலக மேலாளர் மகாதேவனுக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டு தரப்பினரும் இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com