ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தேவை.
மாநில அரசின் செயல்பாட்டைக் குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தில் அவர்கள் அத்துமீறுகின்றனர். ஆளுநர்களுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டுடன் கேரளம் இணைந்து செயல்படும்' என்றார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டும் தெரிவித்தார்.