பட்டுக்கோட்டை அருகே பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே குறிச்சி, ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (56). இவரது மனைவி தீபா லெட்சுமி பேராவூரணி ஒன்றிய தி.மு.க., மகளிரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இன்று காலை, துறவிக்காடு எம்.ஜி.ஆர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்கள், குறிச்சி மாரியம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் போன்ற குப்பைகளை சேகரித்து வந்துள்ளனர்.
அப்போது, சுவாமிநாதனுக்கு செந்தமான இடத்தில், அந்த பெண்கள் குப்பைகளை சேகரித்துள்ளனர். அங்கு வந்த சுவாமிநாதன் அந்த பெண்களிடம், பொருட்களை எல்லாம் திருடி செல்வதாக கூறி, அந்த பெண்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், அவர்கள் வைத்திருந்த பையை கீழே தட்ட கூறியதோடு பெண் ஒருவரையும் காலணியால் அடித்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பெண்களை காலணியால் அடித்த சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீசார், சுவாமிநாதனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு, குறிச்சி வி.ஏ.ஓ., சாந்தலிங்கம் அளித்த புகாரின் பேரில், சுவாமிநாதனை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.