அவிநாசி அருகே தெக்கலூரில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நாய்க்குட்டியுடன் காரை ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார்.
கோவை கவுண்டம்பாளையம் பெருமாள் நகரைச் சேர்ந்த ரங்கராஜன் மகன் திலீப் (39). இவர் தனது நாய்க்குட்டியுடன் காரில் கோவையில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்தார். அவிநாசி, தெக்கலூர் புறவழிச்சாலை அருகே சென்ற போது, திடீரென காரில் தீ புகை வெளியேறி உள்ளது. இதை அறிந்த அவர் தனது நாய்க்குட்டியுடன் காரை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர், இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக தனது நாய்க் குட்டியுடன், திலீப் உயிர்த் தப்பினார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.