சென்னை - மதுரை தேஜஸ் ரயில்: இனி தாம்பரத்தில் நிற்கும்!
சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும்வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் பகல் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
மறுவழியில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.15 மணிக்கு வந்துசேரும்.
இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே நின்றுசென்ற நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சோதனை முறையாக தேஜஸ் ரயில் 6 மாத காலம் தாம்பரத்தில் நிற்கும் தெற்கு ரயில் அறிவித்தது. இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில், தேஜஸ் ரயில் தாம்பரத்தில் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.