
தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவை இந்திய ராணுவம் நீக்கியது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் ஃபுளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டிருந்த மு.க. ஸ்டாலின், பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும். மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது மிகச்சிறந்த மைல்கல்.
அவரின் பணிக்கும் சேவைக்கும் ஆர்வத்திற்கும் மரியாதைக்குரிய வணக்கங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுபகிர்வு செய்து வெளியிட்டிருந்த இந்த வாழ்த்து செய்தியை இந்திய ராணுவம் நீக்கியுள்ளது.
இது குறித்து சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு முதல்வர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.