தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு தொடக்கம்
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை திறந்து வைத்து அதற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.


தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவை திறந்து வைத்து அதற்கான இலச்சினையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (8.08.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்.
வனத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரினக் குற்றங்களை கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு நிறுவப்பட்டு, முதல்வர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு, வன உயிரினக் குற்றங்கள் குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விபரங்களை சேகரம் செய்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்படுகிறது.
மேலும், வன உயிரின குற்றங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல், வனங்களை ஒட்டி வாழும் பகுதிகளில் உள்ள மக்களிடையே தகவல் கட்டமைப்பை மேம்படுத்துதல், வன உயிரினக் குற்றங்கள் சார்ந்த தரவுகளை சேகரித்தல் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள இடங்களை வரைபடமாக தயாரித்தல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.
இப்பிரிவின் தலைமையகம் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டு, இயக்குநரை தலைவராகவும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் துணை இயக்குநர்களின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பிரிவில் 118 முன்கள வனப்பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இப்பிரிவின் வாயிலாக 190-க்கும் அதிகமான வன உயிரினக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யானை தந்தங்கள் மற்றும் யானைத் தந்தத்திலான பொருட்களை விற்பனை செய்தல், புலித்தோல் மற்றும் அதன் பாகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக பாம்புகள், கிளிகள், கடல் சங்குகள், கடல் அட்டைகள் ஆகியவை வைத்திருந்த குற்றங்கள் என 50-க்கும் மேற்பட்ட வனக்குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வன உயிரினப் பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...