பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் உடலை கொண்டு செல்ல நிதி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணி இடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை 2023-24-ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.
அதில், “கட்டுமான தொழிலாளர்கள் பணி இடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடும் செலவீனமும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தால், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான ரயில் செலவு அல்லது விமானம் மூலம் எடுத்துச் சென்றால் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.