சிதம்பரம்: ட்விட்டரில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா, கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவரும் புதன்கிழமை சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாா் தீட்சிதர்களை தாக்கி பூணுலை அறுத்ததாக போலி செய்தியை சமூக ஊடகங்களில் தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் கௌசிக் சுப்ரமணியம் ஆகியோர் பதிவிட்டு அவதூறு பரப்பியதாக பொதுமக்கள் பேசிக் கொண்டதாக, சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் (38) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கௌசிக் சுப்ரமணியம் ஆகிய இருவர் மீது சிதம்பரம் நகர போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்ற இருவரும், சிதம்பரம் நம்பர் - 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை நீதிபதி முன்பு ஆஜராகினர்.