வீரவநல்லூர் இளைஞர் கொலையில் 5 பேர் கைது
சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வீரவநல்லூர் 1 பகுதி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பண்ணையார் குமார் என்ற அருணாசலக்குமார் (42). விவசாயி, பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். ரெட்டியார்புரம் சாலையில் வீற்றிருந்தான்குளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். புதன்கிழமை மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்துக்குச் சென்ற பண்ணையார் குமாரை, 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையும் படிக்க | நெல்லை அருகே கோயில் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை
இந்த வழக்கில் வீரவநல்லூர் யாதவர் நடுத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (24), வீரவநல்லூர் அம்பலத்தம்மன் கோயில் நடுத் தெருவைச் சேர்ந்த மாலையப்பன் மகன் கண்ணன் (21), வீரவநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்த ராமையா மகன் முத்துராஜ் (19), வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயில் சன்னதித் தெருவைச் சேர்ந்த குமார் மகன் வசந்த் (21), வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயில் தெற்குத் தெருவைச் சேர்ந்த பரதன் மகன் கொம்பையா (23) ஆகிய 5 பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், பணணையார் குமாரிடம் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர். கார்த்திக் தச்சநல்லூரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் கார்த்திக் பழக்கம் வழக்கம் குறித்து பண்ணையார் குமாரிடம் கேட்டபோது, பண்ணையார் குமார் கார்த்திக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் கார்த்திக், தனது நண்பர்களுடன் சேர்ந்து பண்ணையார் குமாரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.