5 ஆண்டுகளுக்கு பின் திருவீதி உலா வந்த குறிச்சி கூத்தாண்டவர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 200 ஆண்டு பழமையான குறிச்சி கூத்தாண்டவர் சாமி 'தலை',  5 ஆண்டுகளுக்குப் பிறகு திருவீதி உலா வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
குறிச்சியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தெருவிதி உலா வந்த கூத்தாண்டவர் சாமி.
குறிச்சியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தெருவிதி உலா வந்த கூத்தாண்டவர் சாமி.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 200 ஆண்டு பழமையான குறிச்சி கூத்தாண்டவர் சாமி 'தலை',  5 ஆண்டுகளுக்குப் பிறகு திருவீதி உலா வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மழை கொட்டித் தீர்த்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தில், 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில், சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும், சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமான கூத்தாண்டவரின் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பிரமாண்டமான 'தலை' உருவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சாமிக்கு முழு உருவ சிலை சிற்பம் இல்லை.

இந்த  கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சாமியின் தலையை பக்தர்கள்  வழிபடுவதில்லை. பூசாரி மட்டுமே மாதத்திற்கு ஒரு முறை கோயிலுக்கு சென்று கூத்தாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.  

குறிச்சி கிராம மக்கள் ஒன்று கூடி,  கூத்தாண்டவருக்கு திருவிழா எடுக்கும் தருணத்தில்,  கூத்தாண்டவர் சாமி புஷ்ப ரதத்தில் திருவீதி விழா வரும்போது தான், ஸ்வாமியின் தலையை பக்தர்கள் வணங்கி வழிபாடு செய்ய முடியும்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை குறிச்சி கூத்தாண்டவர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலிலிருந்து கூத்தாண்டவர் ஸ்வாமி 'தலை' திருவீதி உலா வருகை எதிர்பார்த்து,  சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிச்சி கிராம வீதிகளில் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவர் ஸ்வாமியின் பிரமாண்டமான தலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியோடு வழிபாடு நடத்தினர்.

கூத்தாண்டவர் திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து,  சிலையை கோயிலில் மீண்டும் இறக்கி வைத்ததும், குறிச்சி கிராமத்தில் திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறிச்சி கிராமத்தை சேர்ந்த  சண்முகம், வாழப்பாடி அம்சா ஆகியோர் கூறியதாவது:

குருச்சி கிராமத்தில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வரும் 200 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் சாமி திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட கூத்தாண்டவர் சாமி தலையை வைத்து பாதுகாத்து வருகிறோம். சக்தி வாய்ந்த தெய்வமான கூத்தாண்டவரை, திருவிழா உற்சவத்தின் போது தான் பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மற்ற நாள்களில் கோயிலுக்கு சென்று கூத்தாண்டவரை  வழிபடுவதில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் திருவீதி உலா வந்த கூத்தாண்டவரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வழிபாடு செய்தனர். 

திருவீதி உலா உற்சவம் நிறைவடைந்து, சாமி கோவிலுக்குள் சென்றதும், எதிர்பாராத விதமாக மழை கொட்டி தீர்த்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இனி வரும் காலங்களில், ஆண்டு தோறும் கூத்தாண்டவர் திருவிழா நடத்திட, கிராம மக்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com