கோவை: கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3 ஆவது வார்டு பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டி அவை நகரைச் சேர்ந்தவர் சித்ரா (44) 3 ஆவது வார்டு கவுன்சிலர். இவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு வீட்டில் இருந்தபோது, திடீரென முகக்கவசம் அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து படுகாயங்களுடன் இருந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சித்ரா 3.5 செண்ட் நிலம் வாங்கியதாகவும், ஆனால் அதற்கான புரோக்கர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜா (24) என்பவர் மேலும் 4 பேருடன் சேர்ந்து சித்ராவின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதோடு, அவர்களை அரிவாளால் வெட்டிச் சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் இருந்து அரிவாள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிச்சென்ற ராஜா உள்ளிட்ட 5 நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.