கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கூத்தாநல்லூர் நகர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், லெட்சுமாங்குடி பாலத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க | நான்குனேரி சம்பவம்: சிறுவனின் தாயாரிடம் தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்
போராட்டத்திற்கு, மாவட்டப் பொருளாளர் கே. தவபாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பெ.முருகேசு, நகர் மன்ற துணைத் தலைவர் எம். சுதர்ஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடமையாக திறந்து விட வேண்டும். தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி கருகி இழப்பை அடைந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கிட வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், நகர் மன்ற உறுப்பினர் தனலெட்சுமி, விவசாய தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எம். சிவதாஸ், அ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.