/

நான்குனேரி மாணவருக்கு ஸ்டான்லி மருத்துவமனை குழு மூலம் சிறப்பு அறுவை சிகிச்சை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நான்குனேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவருக்கு மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு மூலம் கையில் பிரத்யேக அறுவை

News image
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திர செல்வியை நேரில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கயல்விழி, பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:48 am

DIN

திருநெல்வேலி: நான்குனேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாணவருக்கு மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு மூலம் கையில் பிரத்யேக அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்குனேரியை சேர்ந்த மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திர செல்வி ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சட்டப் பேரவைத் தலைவர் மு .அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மா. சுப்பிரமணியன் மேலும் கூறியது: நான்குனேரியில் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் விவரங்களை கேட்டறிந்தேன். இருவருக்கும் மனநல ஆலோசனைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வருவாய்துறை, மருத்துவத்துறை, காவல்துறை இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

மாணவர் சின்னத்துரைக்கு கையில் பிரத்யேக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும், அதற்கு ஸ்டான்லி மருத்துவமனை சிறந்ததாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதே வேளையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜியிடமும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்த குழுவினர் சிகிச்சை அளிக்க வருவார்கள்.

ஏற்கனவே, நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக எஸ்சி, எஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் முழுமையாக முடிந்து வீடு திரும்பும் போது,  தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் விடுதியில் தங்கி கல்வியை தொடர வைக்க தேவையான நடவடிக்கைகள் ஆட்சியர் மூலம் எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.