மணப்பாறை: மணப்பாறையில் 96 வயதான சுதந்திர போராட்ட தியாகி, குடியிருக்க வீடு கட்டித் தர கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 96). சுதந்திரப் போராட்ட தியாகியான இவரின் மகனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், தனது வீடு சேதமடைந்து இடிந்துவிட்டதால் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று சில ஆண்டுகளாக அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்துள்ளார்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் காமராஜர் சிலை முன்பு கோரிக்கை அடங்கிய பதாகையுடன், உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் காமராஜர் சிலைக்கு சென்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுதந்திர போராட்ட தியாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள், ஆட்டோவில் சுந்தரத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர நாளன்று சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.