நான்குனேரி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் சாதிய கொடுமையால் பிளஸ் 2 மாணவரை பிற சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையும் அவரது தங்கை சந்திராசெல்வியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனை தெரிவித்து இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளியில் மாணவர் சின்னதுரைக்கு சக மாணவர்களால் நேர்ந்த சாதியக் கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர் மற்றும் அவர் தங்கையை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் சேர்த்து அவர்களது கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.