ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நாளை கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
கேரளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக - கேரளா எல்லையான கோவை மாவட்டத்தில் கேரளத்தைச் சேர்ந்த மலையாள மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
அதேபோல அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் மலையாள மக்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாகவே ஓணம் பண்டிகை வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை 29ஆம் (செவ்வாய்க்கிழமை)தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு பதிலாக, செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள மலையாள மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு தங்களது சொந்த ஊரான கேரளம் செல்லத் துவங்கியுள்ளனர்.