சென்னை: மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திடீர் உடல்நிலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாககத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணா்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா, ரூ.10 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட சிறு பிராணிகள் கூடம், நீரிழிவு மையத்தில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நோயாளிகள் காத்திருக்கும் இடம் உள்ளிட்டவற்றை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
எப்போதும் தனது உடல்நலனில் அக்கறையுடன் செயல்படும் அமைச்சர், நாள்தோறும் உடற்பயிற்சி, நடைபயிற்சியை தவறாமல் செய்து வருபவர்.
இந்த நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், அமைச்சரின் உடல்நலம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.