சென்னை: சென்னையில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
புயலின் தாக்கம் காரணமாக இன்று இரவுவரை பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ஆவடி, வடசென்னை, போரூர், தாம்பரம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுமுதல் மின்தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியதால் மின்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.