சென்னை: சென்னையில் கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
அப்பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்க முடியாத சூழல் இருப்பதால் நேற்று காலை முதல் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவின் பால்களை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசுத் தரப்பில் இலவசமாக பால் விநியோகமும் செய்யப்படுகிறது.
பால் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல்வேறு விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனையில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழலில் மக்களின் நலனை கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.