சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தரமணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.