சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார். தந்தை கண் முன்னே, தலை நசுங்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது குழந்தை ஜனுஷிகா(8). இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், தனது தந்தை ஜம்புலிங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | யுஜிசி நெட்: சென்னை, நெல்லூருக்கு நாளை மறுதேர்வு!
சிலுவைபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது புவனகிரி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து டாரஸ் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கிழுந்த சிறுமியின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் தந்தையின் கண் முன்னே சிறுமி பலியானார். ஜம்புலிங்கம் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.