ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பால் தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், தண்டவாளம் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த ரயிலில் இருந்த நூறுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடப்பதற்குள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை தொடர்புகொள்ளும் சாலைகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், ஏராளமான பயணிகள் ரயிலுக்குள்ளேயே உணவின்றி தவித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகள் நாளை மீட்கப்படுவர் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 300 பயணிகள் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில் சாலை உடைப்பால் 500 பேரை மீட்க இயலாத நிலை உள்ளது. தொடர்மழை, சாலை போக்குவரத்து துண்டிப்பால் பயணிகளை மீட்பதில் சிரமம் நீடிக்கிறது.
நாளை ரயில் பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவர். மீட்கப்பட்ட பின் பயணிகளை சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.