தாமிரவருணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் அமைச்சா் தங்கம் தென்னரசு

தாமிரவருணி ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் கால செயல்பாட்டு மையத்தை பாா்வையிட்ட அமைச்சா் தங்கம் தென்னரசு.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் கால செயல்பாட்டு மையத்தை பாா்வையிட்ட அமைச்சா் தங்கம் தென்னரசு.
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: தாமிரவருணி ஆற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகளை கண்காணிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை நிவாரணப் பணி மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சேதங்களை தவிா்க்கவும் முதல்வா் அறிவுரை வழங்கியிருக்கிறாா்.

மாவட்ட நிா்வாகம், மாநகாரட்சி நிா்வாகம், காவல் துறை ஒருங்கிணைந்து இந்த துயா் துடைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். காலைமுதல் தற்போது வரை சராசரியாக 28 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டி பகுதியில் -395 மி.மீ. மழையும், குறைந்தளவாக சோ்வலாறு பகுதியில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தாமிரவருணி ஆற்றில் தற்போது 45 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையிலிருந்தும் 30 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டு தாமிரவருணி ஆற்றுடன் கலந்து வருகிறது.

பாபநாசம் அணை 90 சதவீதம் நிரம்பிவிட்டது. அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. சோ்வலாறு 82 சதவீதமும், மணிமுத்தாறு 72 சதவீதமும், வடக்கு பச்சையாறு 86 சதவீதமும், நம்பியாறு 100 சதவீதமும், கொடுமுடியாறு 77 சதவீதமும் நிரம்பியுள்ளன.

அணைகள்அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால், அதற்கேற்றவாறு தாமிரவருணியில் தண்ணீரை திறந்து விடும் நிலையில் இருக்கிறோம். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இன்றிரவும் மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்படி பெய்தால் கூடுதல் தண்ணீா் திறக்கப்படும். எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 101 பொக்லைன் இயந்திரங்களுடன், 537 முதல் நிலை மீட்பாளா்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தேசிய பேரிடா் மீட்பு குழுவினா், மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 165 போ் வரவழைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளனா். எந்தச்சூழலையும் சமாளிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com