பெருமழை பாதிப்புக்கு 10 பேர் உயிரிழப்பு: தலைமைச் செயலர்
தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 27 எருமை மாடுகள், 297 ஆடுகள், ஆயிரக்கணக்கான கோழிகள் என அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையும், தென்மாவட்ட பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியதாகவும், பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறவில்லை.
ஒரு சில இடங்களில்தான் அதிகனமழை பெய்யும் என்று கணித்தது. வானிலை மையத்தின் கணிப்பு சரியாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விமானப்படை, கடற்படை உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணி நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழையில் சிக்கித் தவிர்க்கும் மக்களுக்கு 9 ஹெலிகாப்டர்கள் மூலம், 11 முறையாக 13,500 கிலோ உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு 34 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையில் 64,90 லிட்டர் பால், தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் 1,350 பேர் ஈடுபட்டுள்ளனர், 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித்தவித்த பயணிகள் மீட்கப்பட்டு சென்னை அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.