பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கில் மேல்முறையீட்டு மனு: ஜன.6-இல் தீர்ப்பு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் அளித்த வழக்கில் இரு பிரிவுகளில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு  இரு  பிரிவுகளில் தலா 3ஆண்டுகள் (ஏககாலம்) தண்டனை
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கில் மேல்முறையீட்டு மனு: ஜன.6-இல் தீர்ப்பு

விழுப்புரம்: பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6-ஆம் தேதி வழங்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு பிரிவுகளில் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு  இரு  பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் (ஏககாலம்) தண்டனையும், செங்கல்பட்டு மாவட்ட  முன்னாள்  எஸ்.பி. கண்ணனுக்கு  ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை  மாவட்ட  நீதிமன்றத்தில்  இருவரும்  மேல்முறையீட்டு  மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்ற போது ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தனது தரப்பு வழக்குரைஞருடன் நீதிமன்றத்தில்  ஆஜரானார். இதைத் தொடர்ந்து  விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (டிச.19) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்குரைஞர் ரவீந்திரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மேல்முறையீட்டு மனு வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதால், தங்கள் தரப்பில் வாதிடுவதற்கு கால அவகாசம் வழங்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

ஓய்வு பெற்ற டிஜிபி தரப்பில் வாதிடுவதற்கு கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு  அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் வைத்தியநாதன், கலா எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது வாதிடுவதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. நீதிமன்றம் என்ன விளையாட்டு மைதானம் என நினைத்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும் மேல்முறையீட்டு மனு மீது வாதிடுவதற்கு காலஅவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தார்.

தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6- ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com