தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை (டிச. 20) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் உடமைகளை இணைந்துள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதி வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள், கடந்த 3 நாள்களாக உணவு, குடிநீர் இன்றி தவிப்பதாக மீட்புக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏரல் மரப்பாலம் பகுதியில் 26 வயது இளைஞர் சிக்கித்தவிப்பதாகவும் வட்டாட்சியர் அலுவலக மாடியில் இருவர் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.