சென்னை: வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு விரைப் பேருந்துகளில் நிவாரணப் பொருள்களை கட்டணமின்றி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) முதல் பெய்த தொடர் கனமழை காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்திறந்துவிடப்பட்டிருந்ததால், ஆற்றங்கரையோரம் இருந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. நிவாரணப் பொருள்களை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.