மறைந்த ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு, தமிழக அரசு சாா்பில் காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும்,பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட முதல்வர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், மத்திய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி குடிமைப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரும், ஒடிசா முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.