விராலிமலை: விராலிமலை சுங்கச் சாவடியில் திடீரென பாஸ்டேக் ஸ்கேனிங் செய்யும் இயந்திரம் பழுதானதால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதகுடி ஊராட்சியில் கட்டண முறை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்கச்சாவடி வழியாக பயணித்து வருகின்றன.வாகனங்கள் செல்வதற்கு நுழைவுக் கட்டணம் ரொக்கமாக வசூலிக்கபட்டு வந்த நிலையில், வாகனங்கள் சுங்கச் சாவடியில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், உடனடியாக ‘பாஸ்டேக்’ முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதையும் படிக்க | கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை!
இந்த நிலையில், புதிது புதிதாக வரும் அப்டேட்டுகளை தற்போது ஒப்பந்த முறையில் சுங்கச்சாவடியை பராமரித்து வரும் நிறுவனம் பதிவேற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது, இதனால் கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்னை இருந்து வருவதாகவும் இதனால் வாகனங்கள் செல்வதில் அவ்வப்போது தாமதம் ஏற்படுகிறது என்றும், இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது என்றும், இதனை நிறுவனம் விரைவில் சரி செய்ய வேண்டும் என்கின்றனர் பணியாளர்கள்.
இருப்பினும், அவ்வப்போது விட்டு விட்டு கிடைத்து வந்த நெட்வொர்க்கும் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்திற்கு மேலாக முழுவதுமாக முடங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுங்கச்சாவடி இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.